Publish Date: Sun, 02 Aug 2020 (13:31 IST)
Updated Date: Sun, 02 Aug 2020 (13:33 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க கல்லூரி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் மார்ச் மாதம் முதலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலமாக தங்களது மாணவர்களுக்கு பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாக பாடங்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசு கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களிடையே பெரும்பாலும் செல்போன்கள் புழக்கத்தில் உள்ளதால் அதன்மூலம் பாடங்களை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்ககம் அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்களுக்கு வாட்ஸப் அல்லது ஆன்லைன் கல்வி செயலிகள் மூலம் பாடங்கள் நடத்துவது குறித்து திட்டமிடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகைப்பதிவு செய்தல், பாடத்திடங்களை திட்டமிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து துறை தலைவர்களோடு ஆலோசித்து நடைமுறைப்படுத்தவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.