Publish Date: Sat, 02 May 2020 (15:02 IST)
Updated Date: Sat, 02 May 2020 (15:04 IST)
கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து தமிழக மாவட்டங்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் முழு ஊரடங்கை அறிவிக்க தொடங்கியுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் முழு ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.
திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்த முறையும் ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதை தொடர்ந்து தஞ்சாவூரிலும் ஊரடங்கு முடியும் வரை வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.