Publish Date: Tue, 05 Jun 2018 (11:48 IST)
Updated Date: Tue, 05 Jun 2018 (11:58 IST)
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட சபையில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. மக்கும் தன்மையில்லாத பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக உண்ணும் கால்நடைகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதில் பிளாஸ்டிக் முக்கிய பங்கை வகிக்கிறது.
கழிவுநீரில் எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால், மழைக்காலங்களில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
எனவே தமிழகத்தில் வரும் ஜனவரி 1 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதித்தும், அதற்கு பதிலாக எளிதில் மக்கும் தன்மையுடைய பாக்கு இலைகள், பாக்கு தட்டுகளை உபயோகிக்க வலியுறுத்தியுள்ளார் முதல்வர்.
மேலும் பால் பாக்கெட் கவர்கள், மருத்துவ பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட அத்தியாவச பொருட்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.