Publish Date: Mon, 09 Apr 2018 (11:32 IST)
Updated Date: Mon, 09 Apr 2018 (11:40 IST)
திரைத்துறையினர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட சத்யராஜ், ராணுவமே வந்தாலும் அசர மாட்டோம் என கூறியதற்கு, தமிழைசை சௌந்தர்ராஜன், சத்யராஜை மிரட்டும் வகையில் பதிலளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய சத்யராஜ் நாம் என்றுமே தமிழர்களின் பக்கம்; தமிழ் உணர்வுகளின் பக்கம். இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம். எந்த அரசாக இருந்தாலும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம். குரல் கொடுக்க தைரியம் இருந்தால் வாருங்கள். இல்லை என்றால் ஒளிந்துகொள்ளுங்கள் என ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசிய போது, சத்யராஜ் ராணுவம் வந்தால் பயப்படமாட்டார், ஆனால் ஐடி ரெய்டு வந்தால் பயந்து தானே ஆக வேண்டும் என சத்யராஜை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் கைக்கூலியாக ஐடி துறை செயல்பட்டு வருகிறது என தமிழிசை ஒப்புக் கொண்டுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.