Publish Date: Thu, 25 Apr 2019 (07:21 IST)
Updated Date: Thu, 25 Apr 2019 (07:24 IST)
இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு மக்களவை தேர்தலும் ஏழு முதல் ஒன்பது கட்டங்களாக நடைபெறுவதும் கடைசி கட்ட தேர்தல் முடிந்தவுடன் அனைத்து வாக்குகளும் மொத்தமாக எண்ணப்படுவதும் வழக்கமான ஒன்று. கடந்த 2014ஆம் ஆண்டு ஒன்பது கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்த அடிப்படை தகவல் கூட தெரியாமல் ஒரு அரசியல் கட்சியை நடத்தி வரும் நடிகர் டி.ராஜேந்தர், இதற்கு முன் எந்த ஆட்சியிலும் தேர்தல் பல கட்டங்களாக பிரித்து நடத்தவில்லை என்றும், இந்த ஆட்சியில் தான் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதாகவும், இதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை நடத்துவது என்பது காலங்காலமாக நடைபெறும் வழக்கங்களில் ஒன்று. முதல்கட்ட தேர்தலின் வாக்கு எண்ணிகையை தேர்தல் முடிந்தவுடன் எண்ணிவிட்டால், அந்த முடிவுகள் அடுத்தகட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவே மொத்தமாக வாக்குகள் எண்ணப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்காக ஒரு மாதம் தாமதம் செய்வது ஏன்? என்றும் டி.ராஜேந்தர் கேள்வி அறிவுபூர்வமாக எழுப்பியுள்ளார். டி.ராஜேந்தர் இவ்வாறு கேள்விகளை எழுப்பியபோது பழம்பெரும் அரசியல்வாதியான தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக தனது மகன் குறளரசனின் திருமண பத்திரிகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு டி.ராஜேந்தர் வழங்கினார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.