Publish Date: Tue, 05 Sep 2017 (18:04 IST)
Updated Date: Tue, 05 Sep 2017 (18:08 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உள்ள மொத்தம் எம்.எல்.ஏக்கள் 134 பேரில் 21 பேர் தினகரன் பக்கம் உள்ளனர். அதோடு, கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் தினகரனையே ஆதரிப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், வெறும் 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்பட்டது. அதன் பின் 110 என செய்திகள் வெளியானது. எப்படி பார்த்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி அரசுக்கு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் “எடப்பாடி பழனிச்சாமி அரசு அதிகாரப்பூர்வமாக தனது மெஜாரிட்டியை இழந்து விட்டது. எனவே, அவர் சசிகலாவிடம் அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி கேட்க வேண்டும். அப்போதுதான் அதிமுக ஆட்சி நீடிக்கும். இல்லையேல் திமுக உள்ளே வரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.