Publish Date: Mon, 07 Dec 2020 (10:47 IST)
Updated Date: Mon, 07 Dec 2020 (10:48 IST)
திண்டுக்கலில் தனியார் பள்ளியில் பணி புரியும் ஊழியர் ஒருவரை மர்ம நபர்கள் கம்பத்தில் நிர்வாணமாக கட்டி வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் பள்ளி ஒன்றில் ஊழியராய் பணியாற்றி வரும் இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி பள்ளிக்கு வேலைக்காக சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கம் தேடிய குடும்பத்தினர் அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆர்.எம்.காலணி மின் மயான வளாகத்தில் நபர் ஒருவர் நிர்வாணமாக கட்டப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நேரில் சென்று சடலத்தை கைப்பற்றிய போலீஸார் அதை உடற்கூராய்வுக்க்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவர் மாயமான மணிகண்டன்தான் என அவரது குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ள நிலையில் கொலைக்கான காரணம் என்ன, எதேனும் முன்பகை உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.