Publish Date: Wed, 28 Mar 2018 (09:16 IST)
Updated Date: Wed, 28 Mar 2018 (22:06 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் ஆம்புலன்ஸை போராட்டக் காரர்கள் விரட்டியடித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி முத்தையாபுரம் அத்திமரப்பட்டி கிராமத்துக்கு சென்ற ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சொந்தமான நடமாடும் மருத்துவ குழு ஆம்புலன்ஸை போராட்டக் குழுவினர் விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.