தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி வீல் சேரில் வந்து வசதியாக அவை விவாதங்களில் பங்கேற்க இருக்கை ஒதுக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்து வருகிறது. இந்த விவகாரம் தலைப்பு செய்தியாக வரும் அளவிற்கு முக்கியத்துவமானதாக மாற்றி வருகின்றன இரு கட்சிகளும்.
இந்நிலையில் அதிமுக ஒதுக்கிய இருக்கை கருணாநிதி வீல் சேரில் வந்து அமர வசதியாக இல்லை என ஸ்டாலின் நேற்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கருணாநிதி சட்டசபைக்கு வருவதை மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த 26 ஆம் தேதி சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், மு.கருணாநிதியை தவிர மற்ற அனைத்து திமுக உறுப்பினர்களுக்கும் எந்தெந்த வரிசையில் இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த பட்டியலில் திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் இல்லவே இல்லை. கருணாநிதிக்கு எந்த இடம், எவ்வாறு ஒதுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிடவே இல்லை. அதாவது கருணாநிதி சட்டமன்றத்திற்கு வருவதை ஸ்டாலின் விரும்பவே இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. என ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.