Publish Date: Sat, 24 Oct 2020 (12:58 IST)
Updated Date: Sat, 24 Oct 2020 (13:05 IST)
மனுஸ்மிருதி எதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவனுக்கு ஆதரவு பெருகிக் கொண்டே செல்கிறது.
சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இப்போது திருமாவளவன் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் திருமா வளவன் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் ‘தொல் திருமாவளவன் பேசியது குறித்து சமூக வலைதளங்களில் பரப்பி வன்முறையை தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. திருமாவளவன் கருத்தை திரித்து கூறியவர்கள் மீது வழக்குப்பதியாதது ஏன்.? திருமாவளவன் மீது வழக்கு காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை, பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை மேற்கோள்காட்டி திருமாவளவன் பேசினார். திருமாவளவன் மீதான பொய் வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும்.’ எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.