Publish Date: Mon, 30 Sep 2019 (15:58 IST)
Updated Date: Mon, 30 Sep 2019 (16:40 IST)
சமீபத்தில் தாம்பரம் அருகிலுள்ள குளத்தில் மணல் அள்ளியதாக கைப்பற்றிய லாரிகள், முதல்வர் எடப்பாடியின் லாரிகள் என்று செய்திகள் வெளிவந்தன.
இதனை குறித்து திமுக ஸ்டாலின், தமிழகத்தில் எடப்பாடியின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது மணல் கொள்ளையர்களின் ஆட்சி நடைபெறுகிறதா என தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
தாம்பரம் அருகேயுள்ள மேலக்கோட்டையூர் குளத்தில், பல நாட்களாக மணல் அள்ளப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியிலிருந்த மக்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதனையடுத்து தாழம்பூர் போலீஸார் சட்டவிரோதமாக மண் அள்ளிக்கொண்டிருந்த லாரிகளை கைப்பற்றினர்.
பின்பு அந்த லாரி டிரைவர்களை விசாரித்த போது, அந்த லாரிகள் அனைத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவரின் சேலம் மைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் அப்போது “ முதல்வர் எடப்பாடி பழனிசாமி லாரி மேலயே வழக்கு போடுவீயா?” என அதிமுக பிரமுகர்கள் மிரட்டியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில், ”எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரை பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்” என கொந்தளித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், தமிழகத்தின் ஆட்சி எடப்பாடியின் கையிலா மணல் கொள்ளையர்களின் கையிலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.