Publish Date: Sat, 05 Sep 2020 (14:45 IST)
Updated Date: Sat, 05 Sep 2020 (14:51 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அரியர்ஸ் முழுவதும் பாஸ் என அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது
இந்த அறிவிப்பை அடுத்து தமிழக முதல்வருக்கு மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது. ஒரு சில மாணவர்கள் போஸ்டர் அடித்தும், பேனர் வைத்தும் இதனை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஏஐசிடிஇ மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 30ஆம் தேதி இந்த மின்னஞ்சல் தங்களுக்கு வந்ததாகவும் அந்த மின்னஞ்சல் உடனடியாக தலைமைச் செயலாளருக்கும் துறை செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சூரப்பா தெரிவித்துள்ளார்
அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி வழங்கும் முறையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் உறுதிபட சூரப்பா கூறி இருக்கிறார். மின்னஞ்சல் வந்தது குறித்து அமைச்சர் மறுப்பு கூறியது குறித்து தான் எதுவும் கருத்து சொல்ல முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார் அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி விஷயத்தில் தமிழக அரசுக்கும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது