Publish Date: Sun, 16 Dec 2018 (18:00 IST)
Updated Date: Sun, 16 Dec 2018 (18:04 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி.
இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, சோனியா மற்றும் ராகுல் காந்தி, இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
சிலையை திறந்து வைத்த உடனேயே மேடையில் அமர்ந்திருந்த அரசியல் தலைவர்கள், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பின் அங்கிருந்து ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வையொட்டி அண்ணா அறிவாலயம் மற்றும் ஒய்எம்சிஏ மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்புகளும், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.