நீதிமன்றத்தில் முறையாக மனுத் தாக்கல் செய்து அனுமதி பெற்ற பின்னர், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், நீதிமன்ற தீர்ப்பில் உள்ள சில கருத்துகளை நீக்கக் கோரி அவர் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனு, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜெயமால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் அமைச்சராக பதவியேற்றால், சாட்சியங்களை கலைக்க முயற்சிப்பதாக புகார் வந்தால், அவருடைய ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும்," என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "வழக்கு விசாரணையில் இருக்கும் காரணத்தால், குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்கக் கூடாது எனக் கூற முடியாது" என்று வாதிட்டார். மத்திய அரசுத் தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
அதற்கு நீதிபதிகள், அமைச்சராவது சட்டப்படி தடுக்கப்படவில்லை என்றாலும், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு தனி மனுவாக தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற்ற பிறகு பதவியேற்கலாம்," என்று கூறினர்.