Publish Date: Fri, 24 Dec 2021 (10:34 IST)
Updated Date: Fri, 24 Dec 2021 (10:36 IST)
சில தினங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் மேடையில் திமுகவினர் சிலர் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
இரு தினங்களுக்கு முன்னர் தருமபுரியில் நடந்த நாம் தமிழர் கட்சி மேடையில் திமுகவினரையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினையும் அவதூறாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசினர். அதனால் ஆத்திரம் அடைந்த திமுக ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் என்பவர் மேடை மேல் ஏறி தொடர்ந்து பேச விடாமல் வன்முறையில் ஈடுபட்டது வீடியோவாக வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது சம்மந்தமாக இரு தரப்புக்கும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுகவின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் திமுக தலைமை வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் திருமாவளவனுக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடைய டிவீட்டில் நாம் தமிழர் கட்சியின் மேடையில் அத்துமீறி ஏறி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிய திமுக வன்முறைக்கும்பலின் அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், திருமாவளவனுக்கு எனது அன்பும், நன்றியும்" எனக் கூறியுள்ளார்.