Publish Date: Fri, 16 Apr 2021 (13:28 IST)
Updated Date: Fri, 16 Apr 2021 (13:32 IST)
12 ஆம் வகுப்பு தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி முதல் நடக்க உள்ளது. இதனால் மாணவர்களுக்கு தொற்று பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைதளப் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் நிலையில், விரைவில் நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனோ பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் முழுப் பொது முடக்கத்திற்கு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். எனக் கூறியுள்ளார்.