Publish Date: Fri, 20 Jul 2018 (09:57 IST)
Updated Date: Fri, 20 Jul 2018 (10:00 IST)
சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்த பொதுமக்களிடம் கருத்து கேட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சென்னை-சேலம் 8 வழி சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை அழிக்கும் இந்த திட்டத்திற்கு அதிமுக, பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலம் அருகே உள்ள கூமாங்காடு என்ற பகுதிக்கு சென்ற சீமான், அந்த பகுதி மக்களிடம் சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து கருத்து கேட்டார். அப்போது திடீரென அங்கு வந்த மல்லூர் போலீசார் சீமானை கைது செய்து மாலை வரை திருமண மண்டபத்தில் வைத்து பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சீமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால் இன்று காலை அவர் சேலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சேலம் சிறை வாசலில் அவரை நாம் தமிழர் கட்சியினர் சிறப்பாக வரவேற்றனர்.
webdunia
Publish Date: Fri, 20 Jul 2018 (09:57 IST)
Updated Date: Fri, 20 Jul 2018 (10:00 IST)