Publish Date: Wed, 16 Oct 2019 (20:41 IST)
Updated Date: Wed, 16 Oct 2019 (20:42 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்கள் தான் என சீமான் கூறியதால் கடந்த 28 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் எழுவர் விடுதலைக்கு பிரச்சனை ஏற்படும் என அரசியல் கட்சிகள் எச்சரித்து வருகின்றனர்
இது குறித்து விளக்கமளித்த சீமான், ‘28 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி கொலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் கூறியபோது அதை ஏற்று இந்த அரசு 7 பேரை விடுதலை செய்ததா? இல்லையே! இப்பொழுது நான் கூறியது மட்டும் எப்படி இது பிரச்சனையாகும்? நான் கூறியது பொய் என்றால் ராஜீவ் காந்தி கொலைக்கும் இந்த எழுவருக்கும் சம்பந்தம் இல்லை என்று உடனடியாக அவர்களை விடுதலை செய்வார்களா? புலிகளுக்கு விதித்த தடையை அவர்கள் நீக்குவார்களா இதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு ஆகும்’ என்று கூறினார்.
மேலும் என் இனத்தை அழித்தது காங்கிரஸ், அதற்கு துணை நின்றது திமுக. இது வரலாற்று உண்மை. இந்த வரலாற்று உண்மையை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது என்று கூறிய சீமான், என்னுடைய கருத்து எந்த கட்சிக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ இருக்காது. இது என்னுடைய என்னுடைய நிலைப்பாடு, எங்கள் கட்சியின் கொள்கை முடிவு என்று மேலும் சீமான் தெரிவித்தார்