Publish Date: Fri, 11 Nov 2022 (14:53 IST)
Updated Date: Fri, 11 Nov 2022 (15:12 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துள்ள 6 பேரை விடுதலை செய்ய இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு சீமான் மற்றும் ராமதாஸ் ஆகிய இருவரும் மகிழ்ச்சியளிப்பதாக டுவீட் பதிவிட்டுள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக ஆளுநராக இதுவரை முடிவெடுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன், கடந்த மே மாதம் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகல் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து, நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,
இராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும்! என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாமகவின் முன்னாள் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தன் டிவிட்டர் பக்கத்தில், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது 6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது!
6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுனர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும்.
இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.
Sinoj
Publish Date: Fri, 11 Nov 2022 (14:53 IST)
Updated Date: Fri, 11 Nov 2022 (15:12 IST)