Publish Date: Wed, 29 Dec 2021 (10:21 IST)
Updated Date: Wed, 29 Dec 2021 (10:24 IST)
பிரதமர் மோடி எங்கள் விருந்தாளி என திமுக கூறியது குறித்து சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து #GoBackModi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வந்தனர். தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி ஜனவரி 12ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடி வருகையை எதிர்க்கமாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் “பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை!” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.