Publish Date: Thu, 06 Jul 2017 (16:53 IST)
Updated Date: Thu, 06 Jul 2017 (16:56 IST)
தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துகள் எத்தனை என்பதை ரஜினிகாந்த் சொல்லட்டும். அதன் பின் அவர் அரசியலுக்கு வரட்டும் என நாம் தமிழர் நிறுவனர் சீமான் பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தொடக்கம் முதலே சீமான் எதிர்த்து வருகிறார். அவர் கோடிக்கணக்கில் சினிமாவில் சம்பாதிக்கட்டும். தமிழன்தான் தமிழகத்தை ஆளவேண்டும். அவரை ஏற்க முடியாது என அதிரடியாக கூறினார்.
சமீபத்தில் ரஜினி அமெரிக்கா சென்ற போது ஒரு கிளப்பில் கேசினோ விளையாடி கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து கருத்து கூறிய சீமான், 'நாங்கள் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம், ரஜினியோ அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கின்றார். அது முதலாளிகளின் விளையாட்டு, எனவே அதை பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது' என்று கிண்டலடித்தார்.
மேலும், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான் “தமிழகத்தில் மணல் விலை ஏறிவிட்டது. மற்ற மாநிலங்களில் ரூ.40 ஆயிரத்திற்கும், வெளிநாடுகளில் ரூ.1 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. ஆனால், இதுபற்றியெல்லாம் ரஜினிகாந்திற்கு எதுவும் தெரியாது. தமிழ் நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன, தமிழ் மொழியில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை என்பதை அவர் வேகமாக கூறட்டும். அதன் பின் அவர் அரசியலுக்கு வரட்டும்” என அவர் கிண்டலாக பேசினார்.
சீமானின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.