நடிகர் கமல் மீது ஊழல் வழக்கு: கைதாகும் சூழல்?
நடிகர் கமல் மீது ஊழல் வழக்கு: கைதாகும் சூழல்?
Publish Date: Tue, 03 Oct 2017 (14:58 IST)
Updated Date: Tue, 03 Oct 2017 (15:02 IST)
நடிகர் கமல் மீது புதிதாக ஊழல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட உள்ளதாகவும். அதற்காக அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றிபெற்றதை அடுத்து நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக நட்சத்திர கிரிக்கெட்டை நடத்தினார்கள். இதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் ஒன்று எழுந்துள்ளது.
அந்த நட்சத்திர கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமையை விஷால் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள், நடிகர் சங்க அறக்கட்டளையைச் சேர்ந்த கமல்ஹாசன் உள்ளிட்டோர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்குவதாக தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்தார்கள். இதில் அவர்கள் ஆறுகோடி ரூபாய் லாபம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
மேலும் நடிகர் சங்க கணக்கு வழக்குகளிலும் ஏகப்பட்ட முறைகேடுகளும் சதிகளும் நடந்துள்ளது என கூறி நடிகர் சங்க உறுப்பினரும் பத்திரிகையாளருமான வாராகி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். அதில் நடிகர் கமல் உட்பட அனைவர் மீதும் மோசடி வழக்குத் தொடர வேண்டும் என கூறியிருந்தார்.
ஆனால் இந்த புகார் மனு மீது காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் வாராகி. இதனையடுத்து ஒரு வாரத்திற்குள் பதில் தெரிவிக்குமாறு போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் கொடுத்த அந்த ஒரு வார கெடு இன்றுடன் முடிவடைகிறது.
கமல் சமீப காலமாக ஆளும் கட்சியுடன் மோதல் போக்கில் இருப்பதால் அவர் மீது வழக்கு போட ஆளும் தரப்பு ஆட்சேபனம் ஏதும் தெரிவிக்காது என்பதால் சென்னை மாநகர போலீஸ் கமல் மீது வழக்குப் போடலாமா என தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.