Publish Date: Fri, 17 Jul 2020 (10:43 IST)
Updated Date: Fri, 17 Jul 2020 (11:37 IST)
சாத்தான்குளம் வழக்கில் சம்மந்தப்பட்ட காவலர்களை முதல் வகுப்பு வசதி கொண்ட சிறையில் அடைக்க கோரிக்கை.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேருக்கும் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் மருத்துவ பரிசோதனை நடத்தியபின் மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து நீதிபதி அறையில் நடந்த விசாரணையின் போது 5 பேரிடமும் சிபிஐ தரப்பில் துன்புறுத்தல் நடந்ததா? முறையான மருத்து பரிசோதனை நடத்தப்பட்டதா? என் கேள்வி எழுப்பியதையடுத்து முறையான முறையில் செய்து கொடுத்தனர் என 5 பேரும் பதில் அளித்தனர்.
இதனையடுத்து சிபிஐ தரப்பில் சிபிஐ காவல் நீட்டிப்பு தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படாத நிலையில் காவல்துறை தரப்பில் 5 பேருக்கும் சிறைக்காவலை நீட்டிக்க மனு அளிக்கப்பட்டது. இதில் காவலர் முத்துராஜா தவிர்த்து 4 பேருக்கும் வரும் 30 ஆம் தேதி நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தவிடப்பட்டுள்ளது.
ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேரும் முதல் நாளே கைது செய்யப்பட்ட நிலையில் முத்துராஜா ஒரு நாளுக்கு பின்பே கைது செய்யப்பட்டதால் நாளை வரை நீதிமன்ற காவல் இருப்பதால் நாளை வீடியோ கான்பிரசிங்கில் விசாரிக்கப்பட்டு நாளை முதல் 30 ஆம் தேதி வரைக்கும் காவல் நீட்டித்து உத்தரவு பிறபிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 5 பேருக்கும் சிறையில் முதல் வகுப்பு வசதிகளை செய்து தர கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Sugapriya Prakash
Publish Date: Fri, 17 Jul 2020 (10:43 IST)
Updated Date: Fri, 17 Jul 2020 (11:37 IST)