Publish Date: Thu, 17 Dec 2020 (10:58 IST)
Updated Date: Thu, 17 Dec 2020 (10:59 IST)
சசிகலா விடுதலை குறித்து கர்நாடக உள்துறைக்கு உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்ட வேண்டிய அபராத தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி கட்டிமுடித்துள்ளதால் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக உள்துறைக்கு உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வழக்கமான கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மற்ற கைதிகள் இரவு 7.30 மணிக்கும், சசிகலாவை 9.30 மணிக்கும் விடுதலை செய்ய இருப்பதாக தெரிகிறது.
மேலும், சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று விடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.