தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-வின் ஆதரவு எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் அதிமுக தரப்பு ஈடுபட்டிப்பதாக தெரிகிறது.
சசிகலா தரப்பிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பி.எஸ் பக்கம் 10 எம்.எல்.ஏக்கள், 11 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன், பொன்னையன் ஆகியோர் சென்றனர். 10 நாட்கள் களோபரத்திற்கு பின் சசிகலா சிறைக்கு சென்றார். அவரின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் மீது கடுமையான கோபத்திலிருக்கும் சசிகலா, அவரை தனிமைபடுத்தும் முயற்சியில் ஈடுபடுமாறு டி.டி.வி.தினகரனிடம் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் விளைவாக, ஓ.பி.எஸ் பக்கம் சென்ற அதிமுகவினர், மீண்டும் வந்து கட்சியில் இணையுங்கள் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதையடுத்து, ஓ.பி.எஸ் பக்கம் உள்ள அனைவரும் உற்சாகம் குறைந்து காணப்படும் நிலையில், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அதிமுக தரப்பு திட்டம் தீட்டி வருவதாக தெரிகிறது.