Publish Date: Tue, 02 Jun 2020 (08:35 IST)
Updated Date: Tue, 02 Jun 2020 (08:36 IST)
தமிழகம் முழுவதும் ஊரடங்கினால் செயல்படாமல் இருந்த சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மார்ச் முதல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சலூன் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சலூன்கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு புதிய உத்தரவை வருவாய் நிர்வாக ஆணையரும், சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதன்படி, முடிவெட்ட, தாடி ஷேவ் செய்ய வருபவர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
மேலங்கி, துண்டு என ஒரு கஸ்டமருக்கு பயன்படுத்தும் பொருட்களை சலவை செய்த பிறகே மற்றவருக்கு பயன்படுத்த வேண்டும்
வாடிக்கையாளரது பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சலூன் கடைகள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்து கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்
ஆகிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.