Publish Date: Wed, 28 Jan 2026 (15:32 IST)
Updated Date: Wed, 28 Jan 2026 (15:37 IST)
சமீபத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக ஒரு ஊழல் அடிமை கட்சி என்று பேசினார். மேலும், எனக்கு அழுத்தம் இருக்கிறது.. ஆனால் அழுத்தத்திற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று பேசியிருந்தார்..
இதுவரை திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் அதிமுகவையும் திட்ட துவங்கியதால் கோபமடைந்த அதிமுக தரப்பு விஜயை கடுமையாக விமர்சிக்க துவங்கியிருக்கிறது.. தனது படம் வெளியாகும் போது 2 ஆயிரம், 3 ஆயிரம் என டிக்கெட்டுகளை விற்று அதில் பல கோடி சம்பாதிக்கும் விஜய் ஒரு மிகப்பெரிய ஊழல்வாதி என்று சமீபத்தில் அதிமுக விமர்சித்திருந்தது.
ஒருபக்கம் தன்னுடைய தலைவா திரைப்படம் ரிலீஸாக வேண்டுமென விஜயுன், அவரின் அப்பாவும், ஜெயலலிதா முன் கைகட்டி நின்றார்கள்.. அப்படி நின்றவர்தான் இப்போது வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அதிமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு தேர்தலின் போது என்னையும் விஜயும் ஜெயலலிதா நேரில் அழைத்து அதிமுகவுக்கு ஆதரவு கொடுங்கள் எனக்கேட்டார். நானும் சரி என்றேன். உங்கள் மகனையும் கொஞ்சம் பேச சொல்லுங்கள் என்றார்.. அவன் சின்ன பையன்.. வேண்டாம் என்றேன். பிரச்சாரம் செய்ய வேண்டாம்.. அதிமுகவுக்கு ஆதரவு என ஒரு வீடியோ போட சொல்லுங்கள்.. போதும் எனக் கேட்டார்.. அதை நாங்கள் செய்யவில்லை.. அந்த கோபம் அவருக்கு இருந்தது.. அதனால் அவர் பழி வாங்கினார் என்று கூறினார்.