Publish Date: Thu, 02 May 2024 (15:27 IST)
Updated Date: Thu, 02 May 2024 (15:32 IST)
கோவை சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் தனது குடும்பத்துடன் பொள்ளாச்சியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக டாடா நெக்சான் காரில் சென்றார்.
பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி கார்த்திகேயன் உள்ளிட்ட மூன்று பேர் வந்துள்ளனர்.
அப்போது கார் ஈச்சனாரி சிக்னல் அருகே வந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
இதையடுத்து காரை சாலை ஓரத்தில் நிறுத்திய கார்த்திகேயன் உள்ளே இருந்த மூன்று பேரும் கீழே இறங்கினர்.
அப்போது திடீரென காரின் முன் பகுதியில் தீப்பிடித்து எரியத் துவங்கி,கார் முழுவதும் மலமலவென எரிந்தது.
அப்போது சாலையில் சென்றவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
மேலும் தீயணைப்புத்துறை மேற்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
விசாரணையில் கார் கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வீஸுக்கு விடப்பட்டு எடுத்து வந்த கார் என்பது தெரியவந்தது.
கடும் வெயில் காரணமாக காரில் தீ பிடித்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.