Publish Date: Fri, 07 Jan 2022 (17:51 IST)
Updated Date: Fri, 07 Jan 2022 (17:56 IST)
தமிழ்நாட்டில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் திருச்சியில் 7 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மூன்றரை லட்ச ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இரவு ஊரடங்கையொட்டி திருச்சி மாநகரில் நேற்று இரவு 10 மணிக்கு முன்பாகவே கடைகள் அடைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்
இந்த நிலையில் தேவர்ஹால் என்ற பகுதியில் மூன்று கடைகளில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர். மேலும் தில்லைநகரில் மருந்துகடைகள், செல்போன் விற்பனை கடைகள், துணிக்கடைகளில் புகுந்த கொள்ளையர்கள் 75 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர்
இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளில் ஒருவர் கடைக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் நிலையில் மற்றொருவர் கடைக்கு செல்வது பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.