Publish Date: Sat, 09 Mar 2019 (09:48 IST)
Updated Date: Sat, 09 Mar 2019 (09:51 IST)
ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றபோது திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். குறிப்பாக திமுக வேட்பாளரின் டெபாசிட் காலியானது.
ஆனால் டிடிவி தினகரன் ரூ.20 டோக்கன் கொடுத்து அந்த டோக்கனுக்கு பணம் தராமல் ஏமாற்றிவிட்டதாக ஆர்கே நகர் வாக்காளர்கள் ஏற்கனவே தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று டிடிவி தினகரனின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்.கே.நகர் பகுதி பெண்கள், 20 ரூபாய் நோட்டை கையில் காண்பித்தவாறு தினகரனுக்கு எதிராக கோஷமிட்டனர்.
வெற்றி பெற்ற பின்னர் தினகரன் தொகுதி பக்கமே வருவதில்லை என்றும், ஆர்.கே.நகர் தொகுதியின் அடிப்படை வசதிகளை அவர் செய்துதரவில்லை என்றும் புகார் தெரிவித்து டிடிவி தினகரனின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.