ஆர்கே நகர் தேர்தல் எப்போது?: நீதிமன்றத்தில் மனு!
ஆர்கே நகர் தேர்தல் எப்போது?: நீதிமன்றத்தில் மனு!
Publish Date: Thu, 07 Sep 2017 (10:03 IST)
Updated Date: Thu, 07 Sep 2017 (10:07 IST)
கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலை பணப்பட்டுவாடா காரணமாக இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனையடுத்து இந்த தொகுதிக்கான தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதி காலியானது. இதனையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மிகவும் முக்கியமான இந்த தேர்தலில் அதிமுக சசிகலா அணி சார்பாக டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர்.
இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்ததையடுத்து தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை ரத்து செய்தது. இதனையடுத்து இந்த தேர்தல் மீண்டும் எப்பொழுது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஒரு தொகுதி காலியாகி 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஜெயலலிதா இறந்து 6 மாதங்களுக்கும் மேல் ஆகிறது, ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் ஆர்கே நகரில் இடைத்தேர்தலை நடத்தாமல், சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என்ற ஒரு விளக்கத்தை மட்டும் கூறியிருந்தது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆர்கே நகர் தொகுதி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது. எனவே இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென கடந்த ஜூன் 3-ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தேன்.
ஆனால் பதிலும் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து இதுவரை வரவில்லை. எனவே ஆர்கே நகர் இடைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.