Publish Date: Fri, 24 Nov 2017 (05:58 IST)
Updated Date: Fri, 24 Nov 2017 (06:21 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகவுள்ள நிலையிலும் அவருடைய தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிக்கும் நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று திடீரென ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் இன்று அவர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு செல்லவுள்ளதாகவும், இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் அனேகமாக டிசம்பர் 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைய அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதை அடுத்து தேர்தல் அறிவிப்புக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றே கருதப்படுகிறது.