Publish Date: Tue, 12 Mar 2019 (11:48 IST)
Updated Date: Tue, 12 Mar 2019 (11:50 IST)
மதுரை : வாடிப்பட்டி அருகே தாய்மாமன் வீட்டுகறிவிருந்தில் ஏற்பட்ட தகறாறில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகன். இவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாவூத்து அணை சடையாண்டி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கிடா வெட்டி கறிவிருந்து வைத்தார்.
இந்த விருந்தில் அழகனின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது விருந்தில் பங்கேற்ற சாணாம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்(27) என்பவருக்கும், குரங்குதோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் சண்டை போட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர்.
கறிவிருந்து முடிந்த பின் இருவரும் ஊருக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சாணாம்பட்டி ரெயில்வே பாலத்தின் கீழ் பிரபு, கார்த்திக் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த கொடூரமான தாக்குதலால் பிரபு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பிரபு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வாடிப்பட்டி போலீசார், கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
தாய் மாமன் வீட்டு கறி விருந்து கொலையில் முடிநத் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.