Publish Date: Wed, 20 Dec 2017 (11:10 IST)
Updated Date: Wed, 20 Dec 2017 (11:15 IST)
மதுராந்தகம் அருகே வீட்டுமனைப் பிரிவிற்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்ற மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின், மேலாளர் மோகன் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது வீட்டுமனை பிரிவிற்கு அங்கீகாரம் வழங்கக் கோரி மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அங்கீகாரம் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின், மேலாளர் மோகன் இருவரும் சீனிவாசனிடம் ரூ. 1.25 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளனர்.
இதையடுத்து சீனிவாசன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகாரளித்தார். ரசாயனம் தடவிய பணத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின், மோகன் ஆகியோரிடம் சீனிவாசன் கொடுத்தபோது மறைவிலிருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் செல்வின் மற்றும் மோகனை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.