Publish Date: Wed, 18 Apr 2018 (16:21 IST)
Updated Date: Wed, 18 Apr 2018 (16:40 IST)
தேவாங்கர் கல்லூரி நிர்வாகத்தில் இருந்து கோஷ்டி மோதல் காரணமாகவே, பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
தேவாங்கர் கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளிடம் நிர்மலா தேவி தவறாக பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி, விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆளுநர் பன்வாரிலால் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளார்.
ஆடியோவில் பேசும் நிர்மலா தேவி தனக்கு ஆளுநர் மட்டம் வர செல்வாக்கு இருப்பாதால் அந்த விவகாரம் பூதாகரமாகியது. எனவே, இது தொடர்பாக நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ஆளுநர், நிர்மலா தேவியை யாரென்றே தெரியாது என்றும், அவரின் முகத்தை பார்த்தது கூட இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், நிர்மலா தேவியின் ஆடியோ எப்படி வெளியானது என்ற தகவல் வெளியே கசிந்துள்ளது.
10 வருடங்களுக்கு முன்பு தேவாங்கர் கல்லூரியில் சேர்ந்த நிர்மலா தேவி, தொடக்கம் முதலே கல்லூரி மாணவிகளை வளைக்கும் வேலையை செய்து வந்துள்ளார். அவரை பற்றிய புகார்களை மாணவிகள் கூறும்போது, நிர்மலா தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி அது வெளியே தெரியாமல் செய்து விடுவாராம். அதேபோல், கல்லூரி நிர்வாகத்தின் சில செயல்பாடுகளை மூடி மறைக்கவும், மானியக் குழுவில் நிதி மற்றும் கல்லூரி நிதியில் நடந்த சில முறைகேடுகளை சரிகட்டவும் நிர்மலா தேவியை சிலர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், தேவாங்கர் கல்லூரி நிர்வாகத்தில் சிலர் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்துள்ளனர். அந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதமே நிர்மலா தேவி பேசிய ஆடியோவை மாணவிகள் சிலர் ஒரு கோஷ்டியிடம் கொடுத்துள்ளனர்.
நிர்மலா தேவியிடம் தொடர்பில் உள்ள கல்லூரி நிர்வாகிகள், காமராஜ் பலகலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஆளுநர் மாளிகை தொடர்புகளை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக சிலர் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
webdunia
Publish Date: Wed, 18 Apr 2018 (16:21 IST)
Updated Date: Wed, 18 Apr 2018 (16:40 IST)