Publish Date: Mon, 16 Sep 2019 (17:28 IST)
Updated Date: Mon, 16 Sep 2019 (17:34 IST)
தமிழர்கள் நன்றியற்றவர்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருக்கமாட்டார் என பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்
சமீபத்தில் நாடு முழுவதும் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டில் அனைவரும், தங்கள் தாய் மொழியை கற்பது போல ஹிந்தி மொழியையும் கற்க வேண்டும். ஹிந்தி தான் இந்தியாவை உலகம் முழுவதும் அடையாளப்படுத்தும் மொழி” என கூறினார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவுத்து வந்தனர்.
தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, குஜராத், வங்காளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் #StopHindiImposition என்ற ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகியது.
இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் “மோடி சம்ஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என புகழ்ந்துள்ளார். ஆனால் அதை தமிழர்கள் கொண்டாடவில்லை, தமிழர்கள் நன்றி மறந்தவர்கள், தமிழர்களுக்கு கொண்டாடத் தெரியாது” என ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில் தமிழர்கள் நன்றியற்றவர்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருக்கமாட்டார் என பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரவீந்திரநாத், இந்து முன்னணி நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட போது, ”நான் ஒரு இந்து, பிறகு தான் மற்றது “ என கூறி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.