Publish Date: Tue, 18 May 2021 (10:50 IST)
Updated Date: Tue, 18 May 2021 (11:52 IST)
கொரோனா பரிசோதனைகளையும், தடுப்பூசிகளையும் அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் தமிழக அரசிற்கு அறிக்கை வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் சுமார் இரு மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று சற்று குறைந்திருக்கிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளது. இது மகிழ்ச்சியடைவதற்கான தருணம் இல்லை என்றாலும் கூட, விரைவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் புள்ளிவிவரமாகும்.
சென்னையில் கொரோனா தொற்று விகிதமும் 23 விழுக்காட்டிலிருந்து குறைந்து 20 விழுக்காட்டிற்கும் கீழ் வந்திருப்பது நிம்மதியளிக்கிறது. அதிக எண்ணிக்கையில் சோதனைகளை செய்யும் போது நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் கண்டு குணப்படுத்த முடியும்.
அதன் மூலம் அவர்கள் வழியாக பிறருக்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும். அதேபோல் தினசரி போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் 3 லட்சமாக அதிகரித்து கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.