Publish Date: Tue, 19 Jan 2021 (11:16 IST)
Updated Date: Tue, 19 Jan 2021 (11:19 IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் காணொலியில் ஆஜராக நடிகர் ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு விசாரணை செய்து வருகிறது. 24ம் கட்ட விசாரணை தொடங்கப்பட உள்ள நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி அந்த சமயம் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்தை நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் தனது உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ள ரஜினிகாந்த விசாரணையில் காணொலி மூலம் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.