Publish Date: Thu, 05 Sep 2019 (09:21 IST)
Updated Date: Thu, 05 Sep 2019 (09:23 IST)
ரஜினி ஒருவேளை பாஜகவில் சேர்ந்தால் அவர் தேசியத் தலைவர் பதவியைதான் கேட்பார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின் பாஜக தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். இதனால் தமிழக பாஜக தற்போது தன்னுடைய அடுத்த தலைவரை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. பாஜக தமிழகத்தில் தற்போது உள்ள நிலையில் பாஜகவில் உள்ள பிரமுகர்கள் சிலர் நியமிக்கப்பட்டால் அது தற்போதைய நிலையை விட இன்னும் மோசமாகவே அமையும் என்பதால், தமிழகத்தைக் கவரும் முகமாக இருக்க வேண்டுமென பாஜக தலைமை நினைக்கிறது. இதனால் பாஜக தலைமைக்கு நெருக்கமான சக்தியாக இருக்கும் ரஜினியை தமிழக பாஜக தலைவராக நியமிக்க இருப்பதாக ஒரு செய்தி கடந்த சில நாட்களாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் ரஜினிகாந்தின் நெருக்கமான நண்பருமான திருநாவுக்கரசரிடம் கேள்வி எழுப்பியபோது ‘ ரஜினி பாஜகவில் உறுப்பினராகவே சேரவில்லை. பின் எப்படி அவரை தமிழக தலைவராக நியமிக்க முடியும். பாஜகவில் தலைவராக நியமிக்க ரஜினியை விட்டால் வேறு ஒரு ஆள் கூட இல்லையா ?. அப்படி ஒருவேளை ரஜினி பாஜகவில் சேர்வதாக இருந்தால் தமிழக தலைவர் பதவி இல்லாமல் தேசிய தலைவர் பதவிதான் கேட்பார்’ எனக் கூறியுள்ளார்.