Publish Date: Wed, 21 Jun 2017 (13:15 IST)
Updated Date: Wed, 21 Jun 2017 (13:46 IST)
ரஜினிக்கு அரசியல் தேவையில்லை என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திமுக சார்பில் பல்லடத்தின் நடைபெற்ற விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசிய போது “மொழியின் வரலாறு தெரிந்தால்தான் நமது கலாச்சாரத்தை காப்பாற்ற முடியும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்த பெருமை கலைஞர் கருணாநிதிக்கே சேரும். தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இருக்கிறது. இதில் புதிதாக கட்சி தொடங்குபவர்களுக்கு கட்சி கொடிக்கு நிறம் கூட கிடைக்காத நிலை உள்ளது.
நிலைமை இப்படி இருக்கும் போது, நடிகர் ரஜினி அரசியல் கட்சியை தொடங்கக்கூடாது என்பது என் கருத்து. மக்களுக்கு உதவ வேண்டுமானால், ரஜினி தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து எதாவது நல்லது செய்யட்டும். அவர் அரசியல் கட்சி தொடங்கக் கூடாது என்பது என் கோரிக்கை” என அவர் தெரிவித்தார்.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கருத்து தெரிவித்த ராதாரவி, தீபா புருஷனெல்லாம் கட்சி தொடங்கும் போது ரஜினி அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது? என நக்கலாக கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.