Publish Date: Thu, 06 Jan 2022 (15:10 IST)
Updated Date: Thu, 06 Jan 2022 (15:11 IST)
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 15 நாட்கள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் பதுங்கியிருந்த ராஜேந்திர பாலாஜியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, பின்னர் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.