Publish Date: Mon, 02 Dec 2019 (12:20 IST)
Updated Date: Mon, 02 Dec 2019 (12:22 IST)
நாளை முதல் மழை படிப்பாடியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, புதுச்சேரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வந்தது. இன்றும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய வானிலை மையம் மழை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தென் கிழக்கு அரபி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவுவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அதன் பின்னர் வட மேற்கு திசை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சதீவு பகுதியில் உள்ள ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இன்று தமிழகத்தில் மழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.