வங்கக் கடலில் எதிர்பார்ப்பிற்கு முன்பே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதை தொடர்ந்து, இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல், நாளையும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், இன்றும் நாளையும் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் சென்னையில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.