Publish Date: Tue, 16 Apr 2024 (13:51 IST)
Updated Date: Tue, 16 Apr 2024 (13:53 IST)
விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் அதிமுக இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் அவர்களால் மக்களுக்கு ஒரு டீ கூட வாங்கி கொடுக்க முடியாது என்று பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார், தேமுதிக வேட்பாளராக விஜயபிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கவுசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்
இந்த தொகுதியில் கடந்த முறை மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறையை அவருக்கு கடும் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று விருதுநகரில் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ராதிகா சரத்குமார் அதிமுக வெற்றி பெற்றால் மக்களுக்கு ஒரு டீ கூட வாங்கி கொடுக்க முடியாது என்றும் ஏனென்றால் அவர்கள் மத்தியிலும் ஆட்சியில் இல்லை மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை என்று தெரிவித்தார்.
மத்தியில் மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்றும் மோடி தான் பிரதமராக போகிறார் என்றும் எனவே பாஜக வேட்பாளர் இங்கு வெற்றி பெற்றால் தான் இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முடியும் என்றும் அவர் பேசினார். அவரது இந்த பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.