Publish Date: Tue, 12 Mar 2019 (11:42 IST)
Updated Date: Tue, 12 Mar 2019 (11:55 IST)
பொள்ளாச்சியில் நடைபெற்ற கொடூரங்களுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் தொடர்பில்லை என கோவை எஸ்.பி விசாரிக்காமலேயே கூறியது எப்படி என திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200 பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட அயோக்கியன் திருநாவுக்கரசு என்பவன் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டான்.
இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப்பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
ஆனால் கோவை மாவட்ட எஸ்.பி இவ்விவகாரத்தில் 100 சதவீதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை என்றார்.
இந்நிலையில் திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் வழக்கை தீர விசாரிக்காமலேயே இவ்வளவு அவசரமா உங்களை "statement" கொடுக்கச் சொன்ன சக்தி எது சார்.... என கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.