Publish Date: Sat, 04 Mar 2017 (16:53 IST)
Updated Date: Sat, 04 Mar 2017 (16:55 IST)
நடிகர் ராதாராவியின் வீட்டிற்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் ஒன்று கூடி போராட்டம் நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை, நடிகரும் அதிமுக பிரச்சார பேச்சாளருமான ராதாரவி, மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசிய விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ராதாரவி எப்போது சர்ச்சையான பேச்சுகளுக்கு பெயர் போனவர். சில நாட்களுக்கு முன் அவர், ஒரு அரசியல் மேடையில் பேசிய போது, வைகோவையும், ராமதாஸையும் மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டுப் பேசினார். அதைக் கேட்டு மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
ஆனால், அவரின் இந்த பேச்சிற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் மனம் புண்படும் படி அவர் பேசியுள்ளதாகவும், மிகவும் அருவெறுப்பு, அநாகரீகம், மனித தன்மையற்றச் செயல் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது வீட்டிற்கு முன்பு கூடிய மாற்றுத்திறனாளிகள், அவர் அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.