Publish Date: Tue, 24 Sep 2019 (15:41 IST)
Updated Date: Tue, 24 Sep 2019 (15:44 IST)
தென்னக ரயில்வேயில் தனியார் ரயில்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னக ரயில்வேயில், சென்னை-பெங்களூர், சென்னை-கோவை, சென்னை-மதுரை வழித்தடத்தில் தனியார் ரயில்கள் இயக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான திட்டம் விரைவில் ஒப்பந்தம் கோரப்பட இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு இந்த மேற்கூறிய வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரயில் பெட்டிகள், வழித்தடம் ஆகியவற்றை ரயில்வே துறை வழங்கும் என்றும், ஆனால் ரயில் கட்டணத்தை தனியார் தான் நிர்ணயிப்பார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பராமரிப்பு செலவுகளையும் தனியார் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தப்படி, ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்திவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது வட இந்தியாவில் லக்னோ-டெல்லி இடையே தேஜஸ் என்னும் தனியார் ரயில் இயக்கப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.