Publish Date: Fri, 06 Oct 2017 (16:23 IST)
Updated Date: Fri, 06 Oct 2017 (17:13 IST)
5 நாட்கள் பரோலில் வெளியே வரும் சசிகலா அவரது கணவரை மட்டுமே சந்திக்க வேண்டும் எனவும், யாரையும் சந்திப்பதோ, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது என சிறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டும் பரோல் கொடுத்து சிறைத்துறை நிர்வாகம் இன்று அனுமதியளித்தது.
அதைத் தொடர்ந்து சென்னை வரும் சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் அவர் தங்குகிறார்.
இந்நிலையில், சசிகலா வெளியே வந்தால் சில அதிமுக அமைச்சர்கள் அவரை சந்தித்து பேசுவார்கள் எனவும், அதனால், அதிமுகவில் சில மாற்றங்கள் ஏற்படும் எனவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என செய்திகள் வெளியானது.
ஆனால், அப்படி எதுவும் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. சசிகலாவிற்கு சிறை நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் இவைகள்தான் :
1. பரோலின் போது நீங்கள் மருத்துவமனையில் உள்ள கணவரை மட்டுமே சந்திக்க வேண்டும். அதேபோல், நீங்கள் குறிப்பிட்டுள்ள வீட்டில் மட்டுமே தங்க வேண்டும்.
2. உங்கள் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ உங்களை யாரும் சந்தித்துப் பேசக்கூடாது.
3. எந்த அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது. அதேபோல், அரசியல் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.
4. ஊடகம் மற்றும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது.
என சிறை நிர்வாகம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளின் காரணமாக, அரசியல்ரீதியாக அவர் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது என்பது தெரியவந்துள்ளது.
Murugan
Publish Date: Fri, 06 Oct 2017 (16:23 IST)
Updated Date: Fri, 06 Oct 2017 (17:13 IST)