Publish Date: Fri, 26 Apr 2024 (14:25 IST)
Updated Date: Fri, 26 Apr 2024 (14:26 IST)
18 வயது நிரம்பாத சிறுவர் அல்லது சிறுமியர் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு தண்டனை என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது மீறி வாகனங்களை ஓட்டினால் சிறுவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவர்கள் இயக்கும் வாகனத்தின் பதிவு சான்று ஒரு ஆண்டுக்கு ரத்து செய்யப்படும் என்றும் 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 25 வயது முடியும் வரை ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாகனங்கள் ஓட்டுபவர்கள் முறையாக லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.