Publish Date: Tue, 21 Feb 2017 (15:42 IST)
Updated Date: Tue, 21 Feb 2017 (15:44 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் என்றைக்கு மெரினா சமாதியில் அடக்கம் செய்யப்பட்டதோ, அதுமுதல் சென்னையில் கலவரம்தான் என நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெ.வின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஜல்லிக்கட்டு வேண்டி, மெரினாவில் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அதன் முடிவில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்ற போது, அங்கு கலவரமும் வெடித்தது. அதன்பின், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெ.வின் சாமாதிக்கு சென்று தியானம் இருந்து விட்டு, அவர் கொடுத்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிரிக்க விடலாமா என்ற படத்தில் நடித்து வரும் பவர்ஸ்டார் சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசும் போது “ முதல்வர் பதவிக்காக அடிதடி நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், நான் இந்த படத்தில் முதல்வராக நடித்துள்ளேன்.
முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தது, என் குடும்பத்தில் ஒரு சகோதரியை இழந்தது போல் உள்ளது. அவர் என்றைக்கு கடற்கரையில் படுத்தாரோ அன்றிலிருந்து ஒரே கலவரம், சண்டை சச்சரவாக உள்ளது” என அவர் பேசினார்.